
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் அம்பேத்கர் 1-வது தெருவைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் மகன் முத்துக்குமார் (19 வயது). வர்ணம் தீட்டும் வேலை செய்து வந்தார். இவர் இலுப்பையூரணி தங்கப்பா நகரில் உள்ள மஜித் என்பவரது வீட்டில் வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று மதியம் 12 மணியளவில் அவர் எந்திரம் மூலம் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக அதில் இருந்த ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு, அவருக்கு மின்சாரம் தாக்கியது.
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்துள்ளார். உடனடியாக சக தொழிலாளர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.