கோவில்பட்டி, ஜூன் 7: வீட்டுவேலை செய்யாததை தந்தை கண்டித்ததால் ஏற்பட்ட விரக்தியில் விஷம் குடித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள சென்னயம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்த்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மகள் கார்த்திபிரியா (20). கோவில்பட்டி அருகேயுள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்த இம்மாணவி, கல்லூரி முடித்து வீட்டிற்கு வரும்போது வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்துவந்தாராம். இதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்துவந்த கார்த்திபிரியா, பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். பின்னர் இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் மீட்கப்பட்டு கோவில்பட்டி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் பலனின்றி அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோவில்பட்டி அருகே விஷம் குடித்த கல்லூரி மாணவி சாவு appeared first on Dinakaran.