சென்னை: சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வென்ற பழங்குடியின மாணவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சை மலை அருகேயுள்ள தோனூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் பரத். இவர் கிளாட் (CLAT) எனப்படும் பொது சட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
அதன்படி, திருச்சியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படிக்க இருக்கிறார். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சட்டப் படிப்பு படிக்கும் முதல் பழங்குடியின் மாணவன் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தாயை இழந்த நிலையில் தந்தை பராமரிப்பில் இருந்த பரத் சாதனை படைத்துள்ளார். இலுப்பூரில் அரசு பழங்குடியினர் பள்ளியில் படித்த மாணவன் பரத் 12ம் வகுப்பு தேர்வில் 356 மதிப்பெண் பெற்றுள்ளார். பொது சட்ட நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் 964 மதிப்பெண்ணை மாணவன் பரத் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கிளாட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள மாணவர் பரத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; உள்ளம் உவகையில் நிறைகிறது. தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்கு தி.மு.க. சட்டத்துறையும், அதன் செயலாளர் என்.ஆர். இளங்கோவும் துணை நின்று அவரை வழிநடத்துவார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post CLATல் தேர்ச்சி.. உள்ளம் உவகையில் நிறைகிறது: பழங்குடியின மாணவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!! appeared first on Dinakaran.