குன்னூர்: குன்னூர் அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதா? என மாவட்ட எஸ்.பி தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள நிலையில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கேரள எல்லையில் உள்ள நீலகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் மாவோயிஸ்ட்கள் நுழைந்து விடாமல் இருக்க நக்சல் தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு பிரிவு போலீசார் எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதா? என அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குன்னூர் வனப்பகுதியில் உள்ள செங்கல்கொம்பை பகுதியில் நேற்று நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் நடந்த இந்த தேடுதல் வேட்டையில் தனிப்படையை சேர்ந்த 10 பேர் பங்கேற்றனர். அவர்கள் இந்த வனப்பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்கு சென்று,அங்குள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது கிராமத்துக்குள் புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
The post குன்னூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை appeared first on Dinakaran.