
சென்னை,
ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள பந்தீஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகா பெரிய குண்டம் விழாவில் முதல் மரியாதை வழங்க உத்தரவிடக்கோரி தேவராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கோவில் வழக்கப்படி தங்கள் குடும்பத்தினர் தலைமையில்தான் சாமி ஊர்வலம் நடத்தப்படும் என்றும், தங்கள் குடும்பத்தினருக்குதான் முதல் மரியாதை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் தனக்கு முதல் மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று மனுதாரர் தேவராஜ் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பல கோவில் விழாக்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட காரணமாக இருப்பதே இந்த முதல் மரியாதைதான் என்று தெரிவித்தார்.
மேலும் கோவில் விழாக்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளை விட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சிக்கிறார்கள் என்றும், இது விழாக்களை நடத்துவதற்கான நோக்கத்தை வீழ்த்திவிடும் என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார். இதுபோன்ற மரபுகள் சமத்துவத்திற்கு எதிரானது என்றும், கடவுள் முன் அனைவரும் சமம் என்றும் குறிப்பிட்ட நீதிபதி, கோவில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதோடு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.