தமிழே பேச தெரியாதவர்கள் தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள நினைக்கிறார்கள் - திமுக எம்.பி. வில்சன்

5 hours ago 1

சென்னை,

திமுக மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் பி. வில்சன் அவர்கள் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்,

ஓரணியில் தமிழ்நாடு என்கிற இந்தச் செயல் திட்டத்தை பற்றி விளக்கிக் கூற வந்திருக்கிறேன். சமீப காலமாகத் தமிழ்நாடு பண்பாடு – பொருளாதாரம் - அரசியல் ரீதியாக பல அநீதிகளை சந்தித்து வருகிறது. கீழடி ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்காதது, இந்தி திணிப்பு, கல்வி நிதி மறுப்பு, கூட்டாட்சி முறையைச் சிதைப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்துவது, நீட் தேர்வு மூலம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பது, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் நம் உரிமை குரலை நசுக்கி பிரதிநிதித்துவத்தை குறைப்பது என தமிழ்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொண்டே உள்ளது.

இது மட்டுமல்ல நம்ம கொடுக்கிற ஒரு ரூபாய் வரிப் பணத்தில் நமக்கு திருப்பி 26 பைசாதான் தருகிறார்கள். உங்கள் எல்லாருக்கும் தெரியும். மிக்ஜாங் என்ற ஒரு புயல் காரணமாக, மழையின் காரணமாக 2023ல் 37,902 கோடி சேதம் ஏற்பட்டு தமிழக அரசு இழப்பீடு மத்திய அரசிடம் கேட்கும் பொழுது, வெறும் 276 கோடி மட்டும்தான் கொடுத்தார்கள். அதுமட்டுமில்லை, அவர்கள் பாக்கி பணத்தை தராததால் உச்சநீதிமன்றத்தைத் தமிழக அரசு நாடியுள்ளது.

இது தவிர தேசிய கல்வி திட்டம் என்கிற பெயரில் மும்மொழி கல்வி திட்டத்தை திணிக்க பார்க்கிறார்கள். ஹிந்தியை கட்டாய கல்வியாகக் கொண்டுவர பார்க்கிறார்கள். அந்த இந்தி திணிப்பை எதிர்த்ததால் 2152 கோடியை இன்று மத்திய அரசு நமக்கு தராமல் வஞ்சித்துவிட்டது. இதை எதிர்த்து முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் உச்சநீதிமன்றம் சென்றுள்ளோம்.

இதையெல்லாம் ஏன் சொல்றேன் என்றால், நமக்கு தர வேண்டிய பணம் நம்முடைய உரிமைகள் எல்லாவற்றையும் அவர்கள் தட்டி பறிக்கிறார்கள். அதைத்தான் சுட்டி காட்டுறேன். நம் தமிழ்நாட்டின் பெருமையையும் மாண்பையும் சிதைக்கத் திட்டமிடுபவர்கள், ஒரு உண்மையை மறந்துவிட்டார்கள். அவர்கள் மறைக்க நினைப்பது சிறிய சுடரை அல்ல; அது ஒரு உதய சூரியன் என்பதை மறந்துவிடுகின்றார்கள். உதய சூரியனை எவர் தடுத்தாலும், அதன் கதிர்கள் தடையை ஊடுருவி பிரகாசிக்கும். சூரியனின் குணமே தமிழ்நாட்டின் மக்களின் குணம்.

எவ்வளவு முறை எதிரிகள் முயன்றாலும், ஒவ்வொரு முறையும் அடக்குமுறைகளை தகர்த்து எழிச்சியுடன் தமிழ்நாடு எழும். நமது வானில் ஆபத்து மேகங்கள் சூழ்ந்த போதெல்லாம், இருளை அழித்து, வெற்றி வெற்றி வெளிச்சத்தை கண்டடைந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். ஏனெனில் தமிழர்கள் வெற்றி சூத்திரமே ஒன்றே ஒன்றுதான். ஆபத்து வரும்போதெல்லாம் நாம் ஒன்றிணைவோம். நமது பலம் ஒருபோதும் குன்றியதில்லை. அச்சுறுத்தப்படுத்தும்போது நாம் ஒன்றுபடுகிறோம். ஒடுக்கப்படும் போது நாம் வீறு கொண்டு எழுகிறோம்.

இப்பொழுது தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை ஒன்றாய், ஓரணியில் திரண்டு நமது மண் - மொழி - மானம் மீது தொடுக்கப்படும் போருக்கு எதிராக போராடி வெல்ல தயாராகிறது. இந்த ஓரணியில் தமிழ்நாடுடைய நோக்கமே மண் - மொழி - மானம் ஆகிய மூன்றும் நாம் காக்க ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் கட்டி காத்துவந்த நமது மண்ணின் பெருமை, இப்பொழுது நமது இளைஞர்களின் கைகளில் உள்ளது. நமது முன்னோடிகள் நமக்காக போராடியது எல்லாம் எதற்காக வெறுமனே நாம் உயிர் வாழ்வதற்கா? இல்லவே… இல்லை. நாம் தலைநிமிர்ந்து சுயமரியாதை உணர்வோடு, பெருமையுடன் வாழவே அவர்கள் போராடினர். இன்றைக்கு நம்முடைய கீழடி ஆய்வுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் இருக்கிறார்கள். அந்த கீழடி ஆய்வு ரிப்போர்ட்டை தயார் செய்தவர் தூக்கி எறியப்படுகிறார்.

அந்த அளவுக்கு இவர்கள் தமிழ்நாடு மீது வெறுப்பை கொண்டுள்ளார்கள். இன்று இந்த வெறுப்பிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது நமது ஒவ்வொரு ஒவ்வொருவரின் கடமையாக ஆகும். நமது குழந்தைகளுக்காகவும் இனி வரவேற்கும் நமது தலைமுறைக்காகவும் நாம் ஒன்றுபடுவோம். எந்த சக்தியாலும் வெல்ல முடியாத, எந்த கூட்டத்தாலும் உடைக்க முடியாத, எந்த வல்லமையாலும் தகர்க்க முடியாத மலைபோல் எழுவோம். நாம் ஒன்றாக ஓரணியில் நின்றால், நம்மை வீழ்த்த எவராலும் முடியாது. இதுவே ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு.

எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும். இணைந்து போராட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கமே. வடக்கில் பழவேற்காடு முதல் தெற்கில் கன்னியாகுமரி வரை மேற்கில் ஆணைக்கட்டி முதல் கிழக்கில் நாகப்பட்டினம் வரை ஜாதி மதம் அரசியல் சார்பு ஆகியவற்றைக் கடந்து ஓரணியில் நிற்கிறது தமிழ்நாடு. இது வெறும் பிரசாரம் அல்ல. தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் ஆகியவற்றைப் பாதுகாக்க ஒன்றிணைந்து போராடி வெல்வதற்காக மாபெரும் முன்னெடுப்பு.

எங்களுடைய இலக்கு 45 நாட்களில் 68ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் அவர்கள் மூலமாக இரண்டு கோடி குடும்பங்கள் சென்று பார்ப்பது. 100 சதவீதம் ஒரு கோடி குடும்பங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கையும் சேர்க்க வேண்டும் என்பது எங்களுடைய இலக்கு. 30% உறுப்பினர்கள் அனைத்து வாக்கு சாவடிகளும் இணைக்க வேண்டும். இதுதான் இலக்கு. இந்த ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பின் மூலம் தமிழ்நாட்டு அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் நாம் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க ஒன்றிணைவார்கள்.

இந்த பரப்புரை மூலம் திமுக உறுப்பினர்கள் அனைவரும் குறைந்தபட்சம் தமிழ்நாட்டின் ஒரு கோடி குடும்பங்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் 30% மக்களை திமுக உறுப்பினராகப் பதிவு செய்வதே இலக்கு.

இந்த செயல் திட்டம் எப்படி செய்யப்படுகிறது என்பதை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை செய்தியை வீடு வீடாகக் கொண்டு செல்லும் வகையில் திமுகவின் கடைநிலை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிடிஏ - வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் புதியதாக 68000 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இந்த வாக்குச்சாவடி டிஜிட்டல் மூவர்கள் எனும் புதிய டிஜிட்டல் பேராளிகளுக்கு கழகத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 68000 வாக்கு சாவடி டிஜிட்டல் முகவர்கள் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரைக்காகத் தனித்துவமாக உருவாக்கப்பட்ட செயலி சமூக ஊடங்களைக் கையாளும் வகையில் இதற்காக ஒரு பயிற்சி தனியாக அளிக்கப்படுகிறது. வருகிற ஜூன் 28 மற்றும் ஜூன் 29ஆம் தேதியில் பயிற்சி பெறுவார்கள். ஏற்கனவே ஜூன் 25ஆம் அன்று கழக தகவல் தொழில்நுட்ப அணிக்கு மாநில அளவான பயிற்சி முகாம் நடைபெறும்.

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தனித்துவமான மூன்று நாள் நிகழ்வாக தொடங்கப்படும். முதல் நாள் அதாவது ஜூலை 1 முதலமைச்சர் அவர்கள் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் பரப்புரையை தொடங்கி வைப்பார். பின்னர் 38 மாவட்ட தலைநகரங்களும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும். இரண்டாம் நாள் அதாவது ஜூலை 2 அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுடன் இணைந்து ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடக்கத்தை குறிக்கும் வகையில் 76 கழக மாவட்டங்களிலும் நடை பயணமாக ஒற்றுமை பேரணியை மேற்கொள்வார்கள். அடுத்தது மூன்றாம் நாள் அதாவது ஜூலை 3 கழகத்தின் பிரத்தியோகிய பரப்புரை குழு அனைத்து வீட்டிற்கும் சென்று பரப்புரை செய்தியை எடுத்து கூறி, ஒவ்வொரு குடும்பத்தையும் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் கீழ் பதிவு செய்யும்.

ஒரு தனி தத்துவ பரப்புரை குழு உருவாக்கப்படும். இதில் ஒரு வாக்குச்சாவடி பாக முகவர், ஒரு வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர், ஒரு இளைஞர் பிரதிநிதி, ஒரு பெண் பிரதிநிதி, எட்டிலிருந்து 10 உள்ளூர் வாக்குச்சாவடி மேலாண்மை குழு, பிஎல்சி உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இது வந்து இந்த வாக்குச்சாவடி பரப்பரை குழுவுக்காக உள்ள இந்த காம்போசிஷன். வாக்குச்சாவடி பரப்புரை குழு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஒவ்வொரு குடும்பத்துடன் ஏழிலிருந்து 10 நிமிடங்கள் கலைந்துரையாடி ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் நோக்கத்தை விளக்கி உறுப்பினர் படிவம் மூலம் அக்குடும்பத்தை ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைப்பார். ஆர்வமுள்ளவர்கள் கழகத்தின் உறுப்பினர்களாக பதிவு செய்வார்கள்.

தமிழே பேச தெரியாதவர்கள் தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள நினைக்கிறார்கள். இதைத் தடுப்பதுதான் ஓரணியில் தமிழ்நாடு செயல்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article