
தெலுங்கானா,
தெலுங்கானா மாநிலம் நாகர்னூல் மாவட்டத்தில் உர்கொண்டபேட்டாவில் உள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் தனது உறவினருடன் நேற்று சென்றுள்ளார். தரிசனத்திற்குப் பிறகு, அவர்கள் கோயிலிலேயே தங்க முடிவு செய்தனர்.
நள்ளிரவில், அந்தப் பெண் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சிலர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து புதர்களுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். சத்தம் கேட்டு உறவினர் அவளைக் காப்பாற்ற முயன்றபோது, அவர் தாக்கப்பட்டு ஒரு மரத்தில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 8 பேரில் 6 பேரை கைது செய்தனர். மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.