குலசேகரம்: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே திற்பரபு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். அதேபோல் தடுப்பணையில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கோதையாற்றில் பாயும் தண்ணீர் இங்கு அருவியாக கொட்டுகிறது. அருவிகளில் குளிக்கவும், படகுசவாரி செய்யவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவிக்கு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை முதலே அதிகளவில் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வரத்தொடங்கினர். கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜில்லென்று கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து கும்மாளமிட்டனர். இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியின் மேல் பகுதியில் உள்ள உல்லாச படகு சேவை பகுதிக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து படகில் உற்சாகமாக ஏறிச்சென்று கோதையாற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கடைகளில் நொறுக்குத்தீணி விற்பனை களைகட்டியது. கோடை விடுமுறை முடியும் வரை திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும் என பணியாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே அசம்பாவிதங்களை தவிர்க்க திற்பரப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post கோடை விடுமுறை எதிரொலி; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்: படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தனர் appeared first on Dinakaran.