கொல்கத்தா அபார பந்துவீச்சு.. சென்னை 103 ரன்கள் சேர்ப்பு

1 week ago 1

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை ஆரம்பம் முதலே கொல்கத்தா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன கான்வே 12 ரன்களில் மொயீன் அலி சுழலில் சிக்கினார். அவரை தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதன்பின் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்த விஜய் சங்கர் - ராகுல் திரிபாதி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் 2 முறை கேட்ச் கண்டத்தில் இருந்த தப்பித்த விஜய் சங்கர் 29 ரன்களிலும், ராகுல் திரிபாதி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சென்னை அணிக்கு கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் கடும் குடைச்சல் கொடுத்தனர். துபே ஒரு முனையில் நிதானமாக ஆடி வர மறுமுனையில் விக்கெட் மளமளவென சரிந்தது.

இந்த சரிவிலிருந்து மீள முடியாத சென்னை அணி விக்கெட்டுகளை தாரை வார்த்தது. அஸ்வின் ஒரு ரன்னிலும், ஜடேஜா டக் அவுட்டிலும், இம்பேக்ட் வீரராக வந்த தீபக் ஹூடா டக் அவுட்டிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த கேப்டன் மகேந்திரசிங் தோனி 1 ரன்னில் சுனில் நரைன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

20 ஓவர்கள் தாக்குப்பிடித்த சென்னை 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் அடித்துள்ளது. துபே 31 ரன்களுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா களமிறங்க உள்ளது.

Read Entire Article