சோழிங்கநல்லூர்: கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு சென்ற மகன், ஒடிசா மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், உடலை மீட்கக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சா வாங்கிக்கொண்டு வரும் போது 5 பேர் கும்பல் அடித்துக் கொன்றது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஹரி. இவரது மனைவி ஜோதி. தம்பதியரின் 2வது மகன் அஜய். ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று, படிப்பை பாதியில் நிறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், கடந்த 27ம்தேதி கொடைக்கானலுக்கு, நண்பர்களுடன் டூருக்கு போவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால், செங்குன்றத்தை சேர்ந்த கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி அபினேஷ் என்பவருடன், அஜய் கஞ்சா வாங்குவதற்கு ஒடிசாவிற்கு சென்றுள்ளார்.
அப்போது, ஒடிசாவில் 3 கிலோ கஞ்சாவை ஒரு பிரிவினரிடமிருந்து வாங்கிக்கொண்டு, ரயில்வே டிராக்கில் நடந்து வரும்போது ஒடிசாவை சேர்ந்த மற்றொரு பிரிவைச் 5 பேர் கொண்ட கும்பல், இவர்களை துரத்தியுள்ளனர்.
இதில், அபினேஷ் தப்பித்துச் சென்றதாகவும், அஜய் அவர்களிடம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது இதையடுத்து, அஜய்யை பிடித்து வைத்துக்கொண்ட ஒடிசாவை சேர்ந்த 5 பேர் கும்பல், ரூ.5 லட்சம் கொடுத்தால் உயிருடன் விடுவோம் என அஜய் வீட்டிற்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அஜய்யின் பெற்றோர்கள், இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் அஜய்யின் போனில் தொடர்பு கொண்டபோது, போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சந்தேகத்தில் மீண்டும் மகன் அஜய்யுடன் சென்ற அபினேஷ் என்பவரை விசாரிக்கும்போது, அஜய்யை கொன்று விட்டதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.டூருக்கு செல்வதாக சென்ற தனது மகன் ஒடிசாவில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை கேட்டதும், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு திருவள்ளூர்- புல்லரம்பாக்கம் சாலையில் அஜய்யின் உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கொடைக்கானலுக்கு டூருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகன் ஒடிசா சென்றது ஏன் என தெரியவில்லை என்றும், உடலை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அபினேஷ் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியுடன் கஞ்சாவை வாங்கி வருவதற்காக ஒடிசா சென்றதாகவும், அதில் ஒரு பிரிவினரிடமிருந்து கஞ்சா வாங்கியதால் எதிர் பிரிவினர் எங்களிடம் வாங்காமல் அங்கே ஏன் வாங்கினீர்கள் எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டு, பணம் கேட்டு மிரட்டியதோடு, பணம் தராததால் அஜயை அடித்துக்கொலை செய்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.
The post கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு ஒடிசாவில் கஞ்சா வாங்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை: பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.