கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனூர் சூழல் சுற்றுலா பூங்கா பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமான மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக பார்வையிடும் இடமாக மன்னவனூர் சூழல் சுற்றுலா பூங்கா உள்ளது. கொடைக்கானலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள மன்னவனூர் ஏரியின் அருகில் இந்த பூங்கா அமைந்துள்ளது. பார்வையாளர்கள் நுழைவு கட்டணம் செலுத்தி இப்பகுதிக்கு செல்ல வேண்டும். இந்த பகுதி ஜிப் ரோப் சாகச விளையாட்டுக்கும் பிரபலமான இடமாக உள்ளது.
மேலும் மன்னவனூர் ஏரியில் பரிசல் சவாரி, ஏரியை சுற்றி குதிரை சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவர். இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வனத்துறை முடிவு செய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனாவின் உத்தரவுப்படி மன்னவனூர் சூழல் பூங்கா கடந்த ஏப்.1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மூடப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் முடிவடைந்து நேற்று பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் பூங்காவை கண்டு ரசித்தனர். மேலும் ஏரியில் படகு சவாரி மற்றும் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.
The post கொடைக்கானலில் மன்னவனூர் பூங்கா மீண்டும் திறப்பு appeared first on Dinakaran.