
திருவனந்தபுரம்,
கேரளாவில் வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே மே 24ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இடைவிடாது கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, கொல்லம், பத்தனம்திட்டா என பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதையடுத்து, முன் எச்சரிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த கலெக்டர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் எர்ணாகுளம் திருமராடி பகுதியில் மரம் விழுந்ததில் அன்னகுட்டி சாக்கோ (80) என்பவர் பலியானார். ஆலப்புழா அருகில் புன்னம்பரா பகுதியில் நீரில் மூழ்கி ஜேம்ஸ்(65) என்பவர் உயிரிழந்தார். மாநிலத்தில் மொத்தம் மழைக்கு இதுவரை 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக சென்றுள்ளனர்.ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்தனர். பத்தினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.