
பிரான்ஸ்,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. தற்பொழுது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் கலந்துக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது நடிகர் அஜித் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது. எனினும் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. காரின் முன் பகுதி மட்டுமே சேதமடைந்ததாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு முன்பு நடைபெற்ற கார் பந்தயங்களிலும் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பல்வேறு சர்வதேச ரேஸிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்துள்ள அஜித், தற்போது ஜிடி-3 ரேஸிங் போட்டிக்கு தயாராகவுள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரேஸில் பங்கேற்கும் முன்னோட்ட பயிற்சிகள் தற்போது பிரான்ஸில் உள்ள பால் ரிச்சர்ட் ரேஸ் டிராக்கில் நடந்து வருகின்றது. அஜித் அங்கு ரேஸிங் உடையில், தனது வாகனத்துடன் தயாராகியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அஜித் ரேஸ் டீம் தீவிரமாக தயாராகி வருகிறது.