
சென்னை,
சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் ரஜினிகாந்த், உதயசந்திரன் ஐஏஎஸ், நடிகை ரோகிணி, தொகுப்பாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் பேசியதாவது; "எனது முதல் கனவுப் படமாக எந்திரன் இருந்தது. தற்போது எனது கனவுப் படமாக வேள்பாரி உள்ளது. நிச்சயம் இது உலகம் போற்றும் தமிழ் படைப்பாக வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.
புது புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தக்கூடிய கதையாக இருக்கிறது வேள்பாரி. கேம் ஆப் த்ரோன்ஸ், அவதார் மாதிரி உலகம் போற்றக் கூடிய, ஜனரஞ்சகமான காவியமா, ஒரு பெருமை மிக்க இந்திய, தமிழ் படைப்பாக வேள்பாரி உருவாகும். என் கனவு நனவாகும் என்று நம்புகிறேன்" என்று ஷங்கர் தெரிவித்தார்.