கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்: பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

5 hours ago 1

சென்னை: என்னுடைய இதய நாற்காலியில் கூட்டணி கட்சி தலைவர்களை உட்கார வைத்துள்ளேன் என தனது பிறந்தநாள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நாளை (மார்ச் 1) கொண்டாடப்படுகிறது. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, பெ.சண்முகம், முத்தரசன், வேல்முருகன், ஈஸ்வரன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கருணாஸ், எர்னாவூர் நாராயணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பிறந்தநாள் பொதுக்கூட்டமாக இல்லாமல் வெற்றிக் கூட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் என்றாலும், திமுக தலைவர் என்றாலும் இரு பதவிகளும் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் வகித்த பதவிகள். இந்த இடத்திற்கு நான் வருவேன் என்று நினைத்துகூட பார்க்க வில்லை. முதலமைச்சராக என்னை அமர வைத்தவர்கள் திமுக தொண்டர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தான். இந்த கூட்டணியில் விரிசல் விழும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் நினைப்பில் தான் மண் விழும் எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது. கொடிய சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க உருவாகியதுதான் இந்த கூட்டணி. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் உயர்ந்து நிற்கிறது. இதற்கு முக்கிய காரணம் கல்வி தான். இதை உணர்ந்து கொண்ட பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுக்க பார்க்கிறது. தேசிய கல்விக்கொள்கையை ஏற்க வேண்டும், மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா? அமைச்சரின் பெயர் தான் தர்மேந்திர பிரதான். ஆனால் தர்மத்துடன் நடந்து கொள்ளவில்லை” என்று கூறினார்.

The post கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்: பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article