கூட்டணிகள் இதில் முடிவாகிவிடுமா?

1 day ago 2

தமிழ்நாட்டில் அடுத்த சட்டசபைக்கு நடக்க இருக்கும் தேர்தலுக்காக எந்த கட்சியுடன் எந்த கட்சி கூட்டணி வைக்கும், எந்தெந்த கட்சிகள் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனியாக நிற்கும் என்ற அரசியல் பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்டது. இப்படி இருக்கும் சூழலில், இந்த கூட்டணிக்கான அச்சாரம் ஜூன் 19-ந்தேதி நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தலையொட்டியே தெளிவாக தெரிந்துவிடும். மாநிலங்களவையை பொறுத்தமட்டில், அதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அந்தந்த மாநில சட்டசபை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் இந்த உறுப்பினர்கள் மொத்தமாக ஒரேநேரத்தில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மூன்றில் ஒருபகுதி உறுப்பினர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 6 பேர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஜூன் 19-ந்தேதி நடக்கும் இந்த 6 உறுப்பினர்களுக்காக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்குகிறது.

மொத்தம் உள்ள 234 இடங்களில் இப்போது தமிழக சட்டசபையில் தி.மு.க. கூட்டணியில் 159 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் 62 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க.வில் 4 உறுப்பினர்களும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் 4 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். சட்டசபையை பொறுத்தவரையில், அவர்கள் அ.தி.மு.க உறுப்பினர்களாகவே கருதப்படுகிறார்கள். பா.ம.க. சார்பில் 5 உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது தி.மு.க.வில் இருந்து வெற்றிபெற்ற வைகோ, வக்கீல் வில்சன், தொழிற்சங்கத்தலைவர் சண்முகம், முகமது அப்துல்லா ஆகியோரின் பதவிகாலமும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகர், அந்த கூட்டணி சார்பில் பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ஆகியோரின் பதவிகாலமும் முடிகிறது.

புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில், ஒரு உறுப்பினர் வெற்றிபெற 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அந்த கணக்கில் தி.மு.க. சார்பில் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாக இருக்கும் நிலையில், அந்த 4 பேரும் நேற்று அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டதுபோக வக்கீல் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆக வைகோவுக்கு வாய்ப்பு அறிவிக்கப்படவில்லை. இதுபோக மீதி 23 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு கையில் இருக்கிறது. இப்போதுள்ள நிலையில் தி.மு.க. கூட்டணி சிந்தாமல், சிதறாமல் உறுதியாக இருக்கிறது.

அ.தி.மு.க.வில் 62 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் வெற்றிபெற 68 பேர் ஆதரவு தேவை. அதாவது, இன்னும் 6 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு, பா.ஜனதாவின் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு, பா.ம.க.வின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இதில் எந்தெந்த கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்பதைப் பொறுத்துத்தான் வெற்றி உறுதியாக இருக்கும். அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் இடம் கிடைப்பதும் சந்தேகமே. அப்படி இருக்கும்பட்சத்தில் அந்த கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறி. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக ஓட்டு போடுவார்களா? அல்லது ஓட்டு போடுவதை தவிர்ப்பார்களா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. ஆக இந்த தேர்தலில் யார், எந்த கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்? என்பதைப்பொறுத்துதான் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியும் அமையும்.

Read Entire Article