
டெல்லி,
2025-26ம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதனிடையே, 2025-26ம் கல்வியாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. கணினி மூலமாக நடைபெறும் இந்த தேர்வுகள் 2 ஷிப்ட்டுகளாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. காலை, மதியம் என இரு ஷிப்ட்டுகளாக தேர்வு நடைபெறும் எனவும், இரு தேர்வுகளுக்கும் வெவ்வேறு வினாக்கள் கேட்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதேவேளை, முதுநிலை நீட் தேர்வை 2 ஷிப்ட்டுகளாக நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதுகலை நீட் தேர்வை 2 ஷிப்ட்டுகளாக நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. 2 ஷிப்ட்டுகளில், 2 வினாத்தாள்கள் அடிப்படையில் நடத்தப்பட்டுவது பாரபட்சத்தை ஏற்படுத்தும் என கூறி தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உத்தரவிட்டது.