
முல்லான்பூர்,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, பெங்களூரு வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 14.1 ஓவர்களில் 101 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 26 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பில் சால்ட் 56 ரன்களுடனும், ரஜத் படிதார் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் ஷர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் 20- வயதான முஷீர் கான் அறிமுக வீரராக களமிறங்கினார். இருப்பினும் 3 பந்துகளை எதிர்கொண்ட அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
முன்னதாக அவர் பேட்டிங் செய்ய வந்தபோது ஸ்லீப் பகுதியில் பீல்டிங் நின்ற விராட் கோலி, முஷீர் கானை 'வாட்டர் பாய்' என்று ஸ்லெட்ஜிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இருப்பினும் அந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து தெரியவில்லை. ஆனாலும் பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
இதனை கண்ட ரசிகர்கள் பலர் இப்படி ஒரு ஜாம்பவான் வீரர் அறிமுக வீரரை ஸ்லெட்ஜிங் செய்வது மிகவும் தவறானது என்று விராட் கோலியை விமர்சித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் முஷீர் கான் பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு சில ஓவர்களுக்கு முன் பெவிலியனில் இருந்து களத்தில் இருந்த சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். இதனை குறிப்பிட்டு விராட் கோலி கிண்டலடித்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.