
தென்காசி,
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4 நாட்களுக்கு பிறகு நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள், அருவிகளில் ஆனந்தமாக குளியல் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் பல பெண்கள் வரிசையில் நின்று குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு ஒன்று திடீரென பெண்கள் குளிக்கும் பகுதியில் விழுந்தது. இதைக்கண்ட அங்கிருந்த பெண்கள் பயந்துபோய் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர், உடும்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த உடும்பை வனத்துறையினர் வனப்பகுதியில் விடும் பணியில் ஈடுபட்டனர். அருவியில் விழுந்த உடும்பைக் கண்டு பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் குற்றாலம் மெயின் அருவி பகுதி சிறிதுநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.