பிரதோஷ நாயகர்
பிரதோஷ காலங்களில் கோயில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் அளவால் சிறிய மூர்த்தியாவார். ஏறத்தாழ ஒன்றரை அடி உயரத்திற்கு உட்பட்டதாகவே இவர் வடிவம் அமைக்கப்பட வேண்டும் என்பது மரபாகும். இந்த மூர்த்தி சந்திரசேகரரைப் போலவே தோற்றமுடையவர். பன்னிரு கரங்களில் மான், மழுவும்; முன்னிரு கைகளில் அபய, வரத முத்திரையும் தாங்கிய வராய் நின்ற நிலையில் விளங்குகின்றார். தலையில் ஜடாமகுடம் விளங்க, அதில் வெண்பறை, கங்கை, ஊமத்தை மலர் தரித்தவராய் மூன்று கண்களும் கருத்த கண்டமுடையவராய் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அமைந்துள்ளார். அவரது இடப்புறத்தில் அம்பிகை தனது வலக் கரத்தில் நீலோற்பல மலர் ஏந்தி, இடது கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் நின்றவாறு காட்சியளிக்கின்றாள். பொதுவாக இருவரையும் தனித்தனியே ஒரே பீடத்தில் நின்றவாறே அமைப்பது தான் வழக்கம் என்றாலும் காலப்போக்கில் கலைஞர்கள் சில மாறுதல்களை ஆகம அடிப்படையில் செய்யத் தொடங்கினர்.
சிவன் விடமுண்ண முற்பட்டதைக் கண்டு தேவி அஞ்சினாள். அவளுடைய பயத்தைப் போக்கும் வகையில் அவர் அவளை அணைத்துக் கொண்டார். இந்த அடிப்படையில் முதல் நிலையில் இறைவன் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருப்பது போன்ற பிரதோஷ நாயகர் உருவம் அமைக்கப் பெற்றது. இந்த மூர்த்தியை உமா ஆலிங்கன மூர்த்தியென்றும், அணைத்தெழுந்த நாதர் என்றும் அழைக்கின்றனர். இரண்டாவது நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் அணைந்த நிலையில் எழுந்தருளியுள்ளனர். இந்த மூர்த்தியைப் பரஸ்பர ஆலிங்கன மூர்த்தி என அழைக்கின்றனர். சென்னை பெசன்ட் நகர் இரத்தினகிரீஸ்வரர் ஆலயத்திலுள்ள பிரதோஷ நாயகர் உமா ஆலிங்கன மூர்த்தியாகவும் சென்னையை அடுத்த மண்ணிவாக்கம் என்னும் ஊரில் உள்ள மூர்த்தி பரஸ்பர ஆலிங்கன மூர்த்தியாகவும் விளங்குவதைக் காணலாம். பிரதோஷ தினத்தின் மாலையில் இந்தப் பிரதோஷ மூர்த்தியை இடப வாகனத்தில் வைத்து அலங்கரித்துக் கோயிலின் உட்பிராகாரத்தில் வலம் வருகின்றனர். திரயோதசி நாளில் பிரதோஷ காலத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னதாகவே மூலவருக்கும் உற்சவமூர்த்திக்கும்ஸ்ரீ ருத்ரம் முதலான மந்திரங்களால் பல்வகைப் பொருள்களைக் கொண்டு திருமுழுக்காட்ட வேண்டும்.
தமிழில் பூசிப்பவர்கள் நீலகண்டப் பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் முதலியவற்றைப் பாராயணம் செய்யலாம். பின்பு மூலவரை அலங்கரித்துத் தூப, தீப நிவேதனங்களால் ஆராதிக்க வேண்டும், பின்னர், உலாத்திருமேனியை இடப வாகனத்தில் வைத்து மலர்களால் அலங்கரித்து உட்பிராகாரத்தில் மும்முறை வலம் வரச் செய்ய வேண்டும். இவ்வாறு வலம் வரும்போது ஒவ்வோர் முறையும் கருவறையை நோக்கி அமைந்துள்ள பிரதான நந்தி (கொடி மரத்தின் அருகில் உள்ளவர்) யின் அருகில் சுவாமியை வடக்கு நோக்கியவாறு நிறுத்தி உலாத்திருமேனிக்கும், நந்திக்கும், மூலவருக்கும் ஒரே நேரத்தில் தீப ஆராதனை செய்யவேண்டும். மூன்றாவது சுற்று வரும்போது மட்டும் ஈசான (வடகிழக்கு) திசையில் பெருமானைத் தெற்கு நோக்கியவாறு நிறுத்திச் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும். இந்த ஈசான திக்கில் நடைபெறும் வழிபாட்டினைக் காண்பது சிறந்த புண்ணியமாகக் கருதப்படுகிறது.
சிவபெருமான் விஷத்தை அருந்தி மயங்கியதுபோலக் கிடந்தபோது எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்து விளையாடி மகிழும் அவருடைய கணங்களான பூதகணங்கள் தாமும் மயங்கி வீழ்ந்து வருந்தின. பின்னர் அவர் திருநடனம் புரிந்தபோது தாமும் மகிழ்ந்து தாமும் தனது விளையாட்டு நடனங்களை நிகழ்த்தின. இவை பூத நிருத்தம் எனப்படும். இதனால் பூதர்கள் வாழும் ஈசான திசையில் பிரதோஷ வேளையில் சுவாமியின் முன்பு பூத நிருத்தம் நடத்தப்படுகின்றன. இதற்கான வாத்திய அமைப்பு ராகம், தாளம் ஆகியன உள்ளன. பின்னர், உலாத்திருமேனிக்கு உரிய உபசாரங்களைச் செய்து அவருடைய இருப்பிடத்தில் சேர்க்கவேண்டும். பிரதோஷ நாயகருக்கு வில்வ மாலைகளை அணிவிப்பது பெரும் புண்ணியம் தருவதாகும். பன்னீர் அபிஷேகம் செய்தல், வடைகளை நிவேதனம் செய்தல் ஆகியனவும் சிறப்பு உடையதாகும்.
சோமசூக்தப் பிரதட்சிணம்
மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூக்தப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை: முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது! இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும்.
அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’.ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இடவலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைபிடிக்கப்படுகிறது.
பிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.பிரதோஷத்தின்போது கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ‘சோமசூக்தப் பிரதட்சிணம் செய்கிறேன் பேர்வழி’ என்று நாம் நிலையாக நந்திக்கு முன்னால் நின்று கொள்ளக் கூடாது. கோபமே இல்லாமல், பொறுமையாக, அமைதியாக வலம் வர வேண்டும்.
The post குறைவற்ற வாழ்வருளும் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.