சென்னை : பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு மற்றும் வங்கித் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது . இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் நிறுத்தம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு தழுவிய அளவில் நாளை பொது வேலை நிறுத்தத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ள அவர்கள், வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளைய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் . தமிழகத்தில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளைய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறி பங்கேற்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன், நோ வொர்க் நோ பே என்ற அடிப்படையில் நாளை சம்பளம் வழங்கப்படாது என்றும் தெரிவித்திருக்கிறார் .பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் கூட, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத அளவிற்கு பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The post நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது :தலைமைச் செயலாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.