
திருப்பூர்,
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே தண்ட வாளத்தில் இன்று காலை ஒரு குழந்தையும், பெண்ணும் இறந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பெண் மற்றும் சிறுவன் உடல் சிதறி கிடந்தன. பின்னர் இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தவர்கள் யார் என்று விசாரணை நடத்தினர்.
அப்போது பெண்ணின் கைப்பையை சோதனையிட்ட போது அதில் திருச்சியில் இருந்து கோவைக்கு செல்வதற்கான ரெயில் டிக்கெட் இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த பெண் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தாலுகா வேளூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மனைவி விஜயலட்சுமி (வயது 26) மற்றும் அவரது மகன் யாகேஸ்வரன் (4) என்பது தெரியவந்தது.
குடும்பதகராறு காரணமாக நேற்று மகனும் விஜயலட்சிமி வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். அதன்பிறகு அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று திருப்பூரில் தண்டவாளத்தில் மகனுடன் இறந்து கிடந்துள்ளார். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.
குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த அவர் மகனுடன் கோவைக்கு சென்ற போது திருப்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கி ரெயில் முன்பு டாய்ந்து தற்கொலை செய்திருக்கலாமா அல்லது ஓடும் ரெயிலில் இருந்து மகனுடன் கீழே குதித்து தற்கொலை செய்திருக்கலாமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனுடன் தாய் தற்கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.