சென்னை, பிப். 6: குடும்ப அட்டைகளில் பெயர் சேர்ப்பது, நீக்கம், முகவரி மாற்றம் செய்ய நாளை மறுதினம் சென்னையில் 19 மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. பொது விநியோக திட்டத்தின் மூலம் பிப்ரவரி மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 8ம் தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலை கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
The post குடும்ப அட்டைகளில் பெயர் சேர்க்க, முகவரி மாற்ற வரும் 8ம் தேதி சிறப்பு முகாம் appeared first on Dinakaran.