
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. இவர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், சொந்த காரணத்திற்காக உடனடியாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். இவர் மீண்டும் எப்போது அணியில் இணைவார் என எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், போதைப்பொருள் சோதனையில் மகிழ்ச்சி அல்லது உடல் சோர்வை போக்குவதற்கான போதைப்பொருளை (recreational drug) ரபாடா பயன்படுத்தியதாக தெரியவந்ததால் அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்ததாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். ரபாடாவுக்கு ஒரு மாத காலம் இடைக்கால தடை விதிக்கப்பட்டதாகவும், அந்த தடை தற்போது முடிவுக்கு வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரில் மீண்டும் களம் காண இருப்பதாக குஜராத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குஜராத் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக போதைப் பொருள் பயன்படுத்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம்.
எனினும், போட்டிகளில் பங்கேற்காதபோது அதை பயன்படுத்தியதாகவோ, போட்டிகளில் செயல்திறனை அதிகரிக்க அதை பயன்படுத்தவில்லை என்றோ நிரூபித்தால் தடைக் காலம் 3 மாதங்களாக குறைக்கப்படலாம். போதைப் பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கலந்தாலோசனையில் பங்கேற்றால் அந்தத் தடைக்காலம் மேலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.