கீழக்கரை புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல மக்கள் கோரிக்கை

3 months ago 9

 

கீழக்கரை, நவ.29: கீழக்கரை புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து புறநகர் பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்று, கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் சையது இப்ராஹிம் கலெக்டர் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ராமநாதபுரம் மேலாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது, திருநெல்வேலி, சாயல்குடி, கும்பகோணம் போன்ற டிப்போக்களில் இருந்து வரும் அனைத்து புறநகர் பேருந்துகள் மற்றும் நாகூர், பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகள், ராமநாதபுரத்தில் இருந்து ஏர்வாடி செல்லும் மற்றும் ஏர்வாடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் 83 புறநகர் வண்டிகளும் கீழக்கரை புதிய பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. இரவு நேரங்களில், ஏர்வாடி தர்கா செல்லும் பேருந்துகள் கூட வருவதில்லை.

இதனால் பொதுமக்கள், முதியோர்கள், நோயாளிகள், பள்ளிக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் பெரிதும் அவதிப்படுகின்றனர். அனைத்து புறநகர் பேருந்துகளும், எல்லா நேரங்களிலும் கீழக்கரை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழக்கரை பேருந்து நிலையத்திற்கு வராத பேருந்துகளின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.

The post கீழக்கரை புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article