
சென்னை,
போதைப்பொருள் வழக்கில் தற்போது சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். கொகைன் போன்ற ஹை-டெக் போதைப்பொருளை விற்பனை செய்பவர்களையும் அதை பயன்படுத்துகிறவர்களையும் தற்போது பிடித்து வருகிறார்கள். அந்தவகையில் கொகைன் போதைப் பொருளை விற்பனை செய்ததாக சேலத்தை சேர்ந்த பிரதீப் குமார், பெங்களூருவை சேர்ந்த ஆப்பிரிக்க நாட்டவரான ஜான் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை தொடர்ந்து, கொகைன் போதைப்பொருளை பயன்படுத்தியதாக பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் கொடுத்த தகவல் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவும் அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
நடிகர் கிருஷ்ணா பயன்படுத்திய செல்போனில் இருந்த தகவல்கள்தான் அவரை தற்போது சிறையில் தள்ளி இருக்கிறது. நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் இடம் பெற்றுள்ள நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு கிருஷ்ணா கொகைன் போதைப் பொருளை சப்ளை செய்துள்ளது பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை போலீசார் தற்போது தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
இதற்கிடையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த்திற்கு தினமும் காலை பத்திரிகைகள் வழங்கப்படுகிறது. அந்த பத்திரிகைகளில் வரும் செய்திகளை ஸ்ரீகாந்த் உன்னிப்பாக படிக்கிறாராம். நடிகர் கிருஷ்ணா கைதுசெய்யப்பட்ட தகவலை பத்திரிகை செய்தி வாயிலாக தெரிந்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா எங்கே அடைக்கப்பட்டுள்ளார்? என்றும், அவரை பார்க்க முடியுமா? என்றும், சிறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அவரை பார்க்க முடியாது என்று சிறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். ஆனால் ஸ்ரீகாந்த்தை போலவே நடிகர் கிருஷ்ணாவையும் புழல் சிறையில் உள்ள முதல் வகுப்பு அறையில் தனியாக அடைக்கப்பட்டுள்ளார்.