கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் பலி: தலா 3 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

3 hours ago 1

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம்-2 கிராமத்தில் இன்று மாலை கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் வட்டம், வெள்ளாளன் விளை, மீரான்குளம் - சிந்தாமணி சாலையில் 8 நபர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலையின் அருகில் இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் ரவி கோயில்பிச்சை (வயது 60), ஹெச்சியா கிருபாகரன் (வயது 49) க/பெ.ரவி கோயில்பிச்சை, மோசஸ் (வயது 50) த/பெ.தேவதாஸ், வசந்தா (வயது 49) க/பெ.மோசஸ் மற்றும் குழந்தை ஸ்டாலின் (1½ வயது) த/பெ.கெர்சோம் ஆகிய 5 நபர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article