காஷ்மீர் தாக்குதல்: சர்ச்சை வீடியோ பதிவிட்ட திருச்சி வாலிபர் கைது

9 hours ago 2

திருச்சி,

திருச்சி மாநகர சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ராஜசேகர். இவர் அந்த அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பதிவுகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் வள்ளுவர் நகர் ஜின்னா தெருவை சேர்ந்த மன்சூர் அலி (வயது 26) என்பவர் ஒரு ஐ.டி.யில் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததை அவர் பார்த்தார்.

அந்த வீடியோவில், 'ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் ஐ.டி. பிரிவின் பொறுப்பாளராக உள்ள தலித் ஹுசைன் ஷாவின் புகைப்படத்தை காட்டி, அவர் காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். மேலும் அவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிற்காக பணியாற்றுகிறார்' என்று மன்சூர் அலி கூறியிருந்தார்.

இதுகுறித்து போலீஸ் ஏட்டு ராஜசேகர், மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், பாஜக பிரமுகரின் பெயர் மற்றும் புகைப்படத்தை காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புபடுத்தி தவறாக பதிவிட்டு இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையிலும், அரசாங்கத்தின் மீது வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அந்த வீடியோ பதிவு உள்ளது.

மேலும் மத அடிப்படையில் பகைமையை உருவாக்கும், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது, என்று கூறியிருந்தார். அதன்பேரில் மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து மன்சூர் அலியை கைது செய்தார்.

Read Entire Article