
சென்னை,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது.
இதனிடையே எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி நேற்று இரவு தொடங்கி, இன்று அதிகாலை வரையிலான இரவில், பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையைத் தாண்டி ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டது, எல்லையில் பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியா தீர்க்கமாக பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானால் தொடங்கப்பட்ட அனைத்து டிரோன் தாக்குதல்களையும் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் திறம்பட முறியடித்தன.
ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவி வரும் சூழலில், கல்வி பயில காஷ்மீருக்கு சென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த 41 மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்றும், மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்
Whatsapp Number: 75503 31902
TollFree Number: 80690 09901
Missed call Number: 80690 09900
Email: [email protected]