
குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீஸ்வரர் கோவில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்றுள்ள சிவதலங்களில் முதன்மையானது. பாடல் பெற்ற சிவத்தலமான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் விமரிசையாக திருவிழா மற்றும் தேரோட்டம் நடத்தப்படும்.
அவ்வகையில் நடப்பாண்டு சித்திரை திருவிழாவிற்காக ஏப்ரல் 25-ந் தேதி முகூர்த்தகால் ஊன்றப்பட்டது. இதையடுத்து மே 1-ந் தேதி இக்கோவில் மலையின் உச்சியில் உள்ள கோவில் கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அன்று இரவு புஷ்ப விமானத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. கடந்த 5-ந் தேதி திருக்கல்யாணம் மற்றும் சுந்தரருக்கு பொற்கிழியளித்தல் நிகழ்ச்சி நடந்தது.
திருவிழா தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் வாகன சேவை நடைபெற்றது. சுரும்பார்குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர் வாகனத்தில் எழுந்தருளி 4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இக்கோவில் மலையை சுற்றி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. இதையொட்டி சுரும்பார்குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர் உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூக்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிங்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பின்னர் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேராட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை கோவில் தேரிலும், தேர் செல்லும் பகுதிகளிலும் கொட்டி வேண்டுதல்களை நிறைவேற்றினர். பலர் மலை உச்சிக்கு சென்று சுவாமியை வழிபட்டனர். இத்திருவிழாவையொட்டி இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
கோவிலில் இருந்து இன்று காலை புறப்பட்ட தேர் மீண்டும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை அதன் நிலையை அடைய உள்ளது.