
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ராணுவ வீரர்கள் போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 12 சுற்றுலா பயணிகள் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் பலியாகினார். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள். அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதியை அசைக்க முடியாது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.