
டெல்லி,
டெல்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மழை பெய்தால் மாசு கட்டுப்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை பருவமழை சரியாக தொடங்கவில்லை. இடையிடையே அவ்வப்போது மழை பெய்கிறது. நேற்று கூட சில இடங்களில் மழை பெய்தது. ஆனால் இது காற்று மாசுவை தணிக்க போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.
இதனால் செயற்கை மழை பெய்விக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முந்தைய ஆம் ஆத்மி அரசும் கடந்த காலங்களில் இதற்கான நடவடிக்கையை எடுத்தது. ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை. தற்போதைய பா.ஜனதா அரசு இந்த திட்டத்தை வேகமாக முன்னெடுத்துள்ளது.
இதன்படி முதன்முறையாக செயற்கை மழை டெல்லியில் பெய்ய உள்ளது என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி மஞ்ஜிந்தர் சிங் சிர்ஷா நேற்று தெரிவித்தார். செயற்கை மழைக்காக 4-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை மேக விதைப்பு நடத்தப்படலாம் என்பதால் அந்த தினத்துக்குள் மேக விதைப்புக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேக விதைப்பு நடவடிக்கைக்கான விமானத்திட்டம் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்காக புனே ஐ.எம்.டி.யிடம் கான்பூர் ஐ.ஐ.டி.யால் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், திட்டமிடப்பட்ட இந்த காலத்திலும் வானிலை சாதகமற்றதாக இருந்தால், சோதனையை பின்னர் நடத்தக்கூடிய வகையில் மாற்று ஏற்பாடும், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.