
புலவாயோ,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கேஷவ் மகராஜ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன டோனி டி சோர்சி டக் அவுட்டிலும், மேத்யூ பிரிட்ஸ்கே 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வியான் முல்டர் (17 ரன்கள்), பெடிங்காம் டக் அவுட் என விரைவில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்க அணி 55 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
இந்த சுழலில் கை கோர்த்த அறிமுக வீரர்களான டிவால்ட் பிரேவிஸ் - லுஹான் பிரிட்டோரியஸ் கைகோர்த்தனர். இருவரும் நேரத்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். டிவால்ட் பிரேவிஸ் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று ஆடிய பிரிட்டோரியஸ் 153 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்த வந்த கேப்டன் கேசவ் மகராஜ் (21 ரன்), கோடி யூசப் (27 ரன்) நிலைக்கவில்லை. இதற்கிடையே களம் கண்ட கார்பின் போஷ் 124 பந்துகளில் தனது முதல் சதத்தை எட்டினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்துள்ளது. கார்பின் போஷ் 100 ரன்களுடனும், மபாகா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே தரப்பில் தனகா சிவாங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.