
சென்னை,
மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று தெற்கு கொங்கன் - கோவா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவானது. இது நாளை வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
அதன்படி, காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.