
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் காயம் காரணமாக இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். அதனால் கேப்டன் பொறுப்பு ஜிதேஷ் சர்மா வழங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 94 ரன்கள் குவித்தார். பெங்களூரு தரப்பில் ஷெப்பர்டு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஐதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், எஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா 3 பவுண்டரி 3 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் குவித்தார். இதில் அவர் அடித்த சிக்சர் ஒன்று எல்லைக்கோட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்பான்சர்ஷிப் காரின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.