
புதுடெல்லி,
இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மீண்டும் தொடங்குகிறது. நாளை நடக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும் போது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த மாத கடைசியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன. தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருப்பதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.-ல் முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லக்னோ அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் காயம் காரணமாக எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ. 3 கோடிக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.