
சென்னை,
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். காதலர்கள் மட்டுமின்றி பலரும் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பரிசை வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
அந்தவகையில், தமிழகத்தில் காதலர் தின கொண்டாட்டங்கள் இன்று உற்சாகமாக அரங்கேறி வருகின்றன. காதல் ஜோடிகளின் கூடாரமாய் திகழும் சென்னை மெரினா கடற்கரையில் காலை முதல் மதியம் நேரம் செல்ல செல்ல காதல் ஜோடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டன.

பொங்கி வரும் கடல் அலைகளின் சத்தத்தின் பின்னணியில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடற்கரை மணற்பரப்பில் காதலர்கள் சுற்றித்திரிந்தனர். 'காதல் வெயில் சூட்டையுமா அறியாது?' என்று பலர் கிசுகிசுத்தபடியே நடந்து சென்றதை பார்க்க முடிந்தது.

சிலர் தங்களது ஜோடியை கடற்கரைக்கு கூட்டிவந்து, எதிர்பாராத சூழலில் காதலை வெளிப்படுத்தினர். வீட்டில் சிலிண்டர் கூட தூக்க திணறும் இளைஞர்கள் தங்களது காதலிகளை 'அலேக்'காக தூக்கி ஒய்யாரமாக (வலிகளை மறைத்துக்கொண்டு) நடந்து சென்றனர். சுடும் வெயிலிலும் காதல் சேட்டைகளால் மெரினா கடற்கரை குளிர்ச்சியாகவே காணப்பட்டது.

கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்தும், கடல் அலையில் கால் நனைத்தும், 'செல்பி' எடுத்தும், கைகோர்த்து நடந்தும், ஒரு 'கோன் ஐஸ்கிரீமை' பாதி பாதி சாப்பிட்டும், மணற்பரப்பில் விளையாடியும் காதலர் தினத்தில் காதலர்கள் தங்கள் அன்பை பொழிந்தனர்.
இதேபோல சென்னையில் உள்ள மற்ற கடற்கரைகளிலும் காதலர்கள் அதிக அளவில் ஜோடியாக சுற்றித்திரிந்ததை பார்க்க முடிந்தது.
அதேபோல ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், சினிமா தியேட்டர்களிலும் காதல் ஜோடிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. இதுதவிர கோவில்களிலும் காதல் ஜோடிகள் தங்கள் காதல் கைகூட மனமுருக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
காதலர்கள் தாண்டி காதலர் தினத்தை புதுமண தம்பதிகளும் உற்சாகமாக கொண்டாடினார்கள். கணவன் விரும்பும் பரிசு பொருட்களை மனைவியும், மனைவி ரசிக்கும் பரிசை கணவரும் ஆர்வமுடன் வாங்கி தந்தனர். அந்த வகையில் இதய வடிவ தலையணை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வீடுகளில் யாருக்கும் தெரியாமல் பரிமாறப்பட்டன.
மெரினா கடற்கரையில் கூடும் காதல் ஜோடிகளுக்கு காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திருமணம் செய்து வைக்கும் சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு இருப்பதால் மெரினா கடற்கரையில் காவல்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் பொழுது போக்கு பூங்காக்களிலும் காதல் ஜோடிகள் மீதான அத்து மீறல் சம்பவங்களை தடுப்பதற்காக அந்தந்த பகுதி காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.