
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர், இங்குள்ள ஆனந்தசரஸ் குளத்தில் நீருக்கடியில் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார்.
இந்த குளம் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே திறக்கப்படும். இந்த முறை 3 நாட்கள் தெப்ப உற்சவத்திற்காக திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் என மொத்தம் 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முதல் நாள் என்பதால் மூன்று சுற்றுகள் தெப்பம் சுற்றிவந்தது. 2-வது நாளான இன்று 5 சுற்றுகள், 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.