
சென்னை,
1980களில் தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக கொடிகட்டிப் பறந்தவர் நவரச நாயகன் கார்த்திக். மெளன ராகம், மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் ஹீரோவாக வலம் வந்த கார்த்திக்கிற்கு கவுதம் கார்த்திக் என்கிற மகன் உள்ளார். தன்னைப்போலவே தன் மகனும் சினிமாவில் ஹீரோவாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையில் கடந்த 2013-ம் ஆண்டு கவுதம் கார்த்திக்கை தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
கவுதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த 'கடல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தேவராட்டம் படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சிமா மோகனை காதலித்த கவுதம் கார்த்திக் அவரை கடந்த 2022-ம் ஆண்டு நடிகை மஞ்சிமா மோகனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
சினிமாவில் திருப்புமுனை ஏற்படுவதற்காக நடிகர்கள் பெயரை மாற்றுவதுண்டு. நடிகர் ஜெயம் ரவி கூட தன் பெயரை 'ரவி மோகன்' என மாற்றிக்கொண்டார். அந்த வகையில் நடிகர் கவுதம் கார்த்திக் தன் பெயரை 'கவுதம் ராம் கார்த்திக்' என மாற்றினார்.
2024-ம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியான வெற்றியடைந்த "பேச்சி" திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான, வெர்சஸ் புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக், காவல் துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஞ்ஞானம் சார்ந்த கிரைம் திரில்லர் கதைகளத்தைக் கொண்ட இந்தப் புதிய படத்தை, அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்குகிறார். இவர், நாளைய இயக்குநர் - 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. .
இந்தப் படத்தின், படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தில், ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா, தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹம், இசையமைப்பாளர் விதுஷணன், வடிவமைப்பாளர் பாவ்னா கோவர்தன் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் மிராக்கல் மைக்கல் ஆகிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.