
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் இன்று மாலை காலமானார். அவரது மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள வைரமுத்து, "என்னைப் பெற்ற அன்னை அங்கம்மாள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழையும், அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.