
கோவை,
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது20). இவர் கோவை பீளமேடு ராஜூ நாயுடு லே- அவுட்டில் நண்பர்களுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு சிவகங்கையை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அவர், கள்ளக்காதலியை கோவைக்கு அழைத்து வந்து ஒன்றாக வசித்து வந்தார்.
இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை டவுன் போலீசார், கோவை வந்து கோபி மற்றும் அந்த பெண்ணை சிவகங்கைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அந்த பெண், கணவருடன் செல்ல மறுத்து தனது தாயாருடன் சென்று விட்டார். அதன்பிறகு கோவை வந்த கோபி, தனது கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு பீளமேடு ரெயில்வே தண்டவாளம் பகுதியில் நடந்து சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை அறிந்த அவரது நண்பர், கோபியை மீட்டு அறைக்கு அழைத்து சென்றார். அவர், மறுநாள் காலையில் பார்த்த போது கோபி அசைவின்றி கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கோபியை மீட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறபடுத்தியது.