கர்ப்பிணியை தள்ளிவிட்ட விவகாரம்: ரயில்களில் பெண்கள் பெட்டியில் தீவிரமாக சோதனையிட உத்தரவு

3 hours ago 2

* மாநிலம் முழுவதும் ரயில்வே போலீசார் நடவடிக்கை

சேலம்: கோவை-திருப்பதி ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று கீழே தள்ளிவிட்ட சம்பவத்தையடுத்து, ரயில்களில் பெண்கள் பெட்டியில் தீவிரமாக சோதனையிட ரயில்வே போலீசாருக்கு டிஜிபி வன்னியபெருமாள் உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் இன்று காலை முதல் ரயில்களில் பெண்கள் பெட்டியில் ரயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவை-திருப்பதி ரயிலில் நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் பயணித்தார். அப்பெட்டியில் கர்ப்பிணி பெண் மட்டும் தனியாக இருந்தார். ரயில் புறம்படும் போது, அப்பெட்டியில் ஏறிய வாலிபர், கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று, கடுமையாக தாக்கி கீழே எட்டி உதைத்து தள்ளிவிட்டார். ஓடும் ரயிலில் இருந்து விழுந்த அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட வேலூர் கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தையடுத்து, ரயில்களில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிதீவிரப்படுத்த தமிழ்நாடு ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் எடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு ரயில்வே போலீஸ் டிஜிபி வன்னியபெருமாள் இன்று காலை, அனைத்து ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், சமீப காலங்களில், பெண் பயணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் ஆண்கள் அத்துமீறி நுழைவதும், அராஜகமான செயல்களில் ஈடுபடுவதுமான செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற செயல்களை கண்காணிக்கும் விதமாகவும், கட்டுப்படுத்தும் விதமாகவும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், ரயில் வண்டிகள் புறப்படும் முன்பு அந்த வண்டிகளில் பெண்களுக்கான பயண பெட்டிகளில் தமிழ்நாடு இருப்புபாதை பெண் காவலர்கள் நுழைந்து, அப்பெட்டிகளில் பயணிக்கும் பெண் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனரா? என்பதையும், ஆண் பயணிகள் யாரேனும் அத்துமீறி நுழைந்து இருக்கிறார்களா? என்பதையும் பார்க்க வேண்டும். பெண் பயணிகளுக்கு வேறு ஏதேனும் இடர்பாடுகள் அல்லது கோரிக்கைகள் உள்ளதா? என்பதையும் விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து, அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட வேண்டும்.

சென்னை, திருச்சி ரயில்வே காவல் மாவட்டங்களில் பணிபுரியும் எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் அனைவரும், இதில் தனிப்பட்ட கவனம் செலுத்தி இனி வரும் காலங்களில் பெண் பயணிகளின் ரயில் பயணம் பாதுகாப்பானதாக இருக்க தேவையான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அறிக்கையை அளித்திட வேண்டும், என டிஐிபி வன்னியபெருமாள் உத்தரவிட்டுள்ளார். ரயில்வே டிஜிபியின் உத்தரவையடுத்து மாநிலம் முழுவதும் இன்று காலை முதல், அனைத்து ரயில்களிலும் பெண்கள் பெட்டியில் ரயில்வே பெண் போலீசார் சோதனையிட்டு, பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post கர்ப்பிணியை தள்ளிவிட்ட விவகாரம்: ரயில்களில் பெண்கள் பெட்டியில் தீவிரமாக சோதனையிட உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article