
பெங்களூரு,
18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் வலுவாக விளங்கி வருகிறது. லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
ஐ.பி.எல். தொடரின் அறிமுக சீசனில் இருந்து தொடர்ந்து 18-வது ஆண்டாக ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர விராட் கோலி இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள பெங்களூரு அணிக்கு கர்நாடகா துணை முதல் -மந்திரி டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் ஆர்சிபி அணியின் ஜெர்சி அணிந்து பேசியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "18 வருட மன உறுதி. ஒவ்வொரு ரசிகரின் பிரார்த்தனையும், உற்சாகமும், மனவேதனையும் இன்றைய தினத்திற்கு அழைத்து சென்றுள்ளன. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கர்நாடகா உங்களோடு இருக்கிறது. அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம்" என்று வாழ்த்தியுள்ளார்.