
கருவுற்ற பெண்ணை தாக்குவதுதான் காவல் அறமா? என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற கருவுற்ற பெண்ணை தாக்குவது தான் காவல் அறமா? காவல்துறையின் ஈரல் முற்றிலுமாக அழுகி விட்டதா?
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதற்காக சென்ற செவ்வந்தி என்ற கருவுற்ற பெண் உள்பட 3 பெண்கள் அந்தக் காவல்நிலையத்தில் பணியாற்றும் இராமர் என்ற காவலரால் கொடூரமாகத் தாக்கும் காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீதி கேட்டு வந்த பெண்ணை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
காவல்துறை பொதுமக்களின் நண்பனாகச் செயல்பட வேண்டும்; அனைத்துக் காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் அமர்த்தப்பட்டு புகார் கொடுக்க வரும் அனைவரும் கனிவாக நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வசன மழை பொழிந்து வருகிறார். ஆனால், குற்றங்களைச் செய்து விட்டு கையூட்டு கொடுக்கும் பணக்காரர்களுக்கு மட்டும் தான் காவல்நிலையங்களில் மரியாதைக் கிடைக்கிறது. பாதிக்கப்பட்டு நீதி கேட்டு செல்லும் பெண்களுக்கு அடி உதை தான் கிடைக்கிறது. திமுக ஆட்சியின் காவல் அறம் இது தானா?
'தமிழகக் காவல்துறையின் ஈரல் முக்கால்வாசி அழுகி விட்டது' என்று 1996 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி சட்டப் பேரவையிலேயே குற்றஞ்சாட்டினார். ஆனால், இன்று அவரது புதல்வர் ஆட்சியில் காவல்துறையின் ஈரல் முழுமையாகவே அழுகி விட்டது என்பதைத் தான் கன்னம்மாசத்திரம் காவல்நிலையத் தாக்குதல் காட்டுகிறது.
பாலியல் தொல்லையாலும், அதன் பின் காவல்நிலையத்தில் காவலரின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு நீதி வழங்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட காவலர் இராமர் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளுக்கும் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.