
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு, 2025-2026-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
அதாவது குவிண்டாலுக்கு ரூ.355 வீதம் 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 10.25 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள ஒவ்வொரு 0.1 சதவீதத்துக்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை கிடைக்கும். குறைவாக உள்ள மீட்பில் ஒவ்வொரு 0.1 சதவீதத்துக்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை குறைக்கப்படும்.
கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் 9.5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு எந்தவித விலக்கும் அளிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்தகைய விவசாயிகளுக்கு வரும் 2025-2026-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.329.05 கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.