கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி - முதல்-அமைச்சர் வழங்கினார்

1 week ago 2

சென்னை,

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டது. இதில் கிடைத்த வட்டி தொகையை கொண்டு மாதந்தோறும் ஏழை-எளிய நலிந்தோருக்கு உதவி தொகை 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வந்தது.

30-வது புத்தக கண்காட்சியை கடந்த 10.1.2007 அன்று கருணாநிதி திறந்து வைத்து பேசுகையில், ' கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி அந்த சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள ரூ.4 கோடி வைப்புநிதியில் இருந்து வரும் வட்டி தொகையில் இருந்து 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

2005-ம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ.6 கோடியே 21 லட்சத்து 90 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article