*ஔவையாருக்கு சுட்டபழம் உதிர்த்துத் தந்தானே முருகன், அந்த நாவல் மரம், பழமுதிர்சோலையில் தலவிருட்சமாக விளங்குகிறது. இந்த நாவல் மரம் கந்தசஷ்டி நாட்களில் மட்டுமே கனிகளைத் தருகிறது என்பது வியப்பான தகவல்.
*திருவையாற்றிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது சங்கம க்ஷேத்திரம் எனும் திருக்கூடலூர். ஆடுதுறைப்பெருமாள் அருளும் இத்தலத்தின் தலவிருட்சம் பலாமரம்.
*ஜம்பு முனிவரால் வளர்க்கப்பட்ட வெண்நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்டது, ஜம்புகேஸ்வரம் எனும் திருவானைக்காவல். இத்தல ஈசனான ஜம்புகேஸ்வரரை நவகிரக ஜன்னல் என்ற அமைப்பின் மூலம் தரிசித்த பின்னரே ஆலய வலம் வருவது நடைமுறையில் உள்ளது.
*நான்கு புறங்களிலும் நான்கு வகை சுவைகளுடன் பழங்கள் தரும் அதிசய மாமரம், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் தலவிருட்சமாகும்.
*காழிச்சீராம விண்ணகரம் எனும் சீர்காழி தாடாளன் ஆலயத்தின் தல விருட்சம் பலாமரம். இத்தல பெருமாளின் திருவடியின் கீழ் மகாபலியின் பேரன் நமுச்சியை தரிசிக்கலாம்.
*தஞ்சாவூர் திருப்பழனம் ஆபத்சகாயர் ஆலயத்தில் கதலி வாழை மரமே தல விருட்சம். பங்குனி, புரட்டாசி மாத பவுர்ணமி தினங்களிலும் அதற்கு முன்பின் தினங்களிலும் சந்திரன் தன் கிரணங்களால் இத்தல ஆபத்சகாயரை ஆராதிக்கின்றார்.
*திருச்சி மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் ஆலயத்தில், பெயருக்கேற்றபடி (வடமொழியில் ஆம் என்றால் மாம்பழம்) மாமரமே தலவிருட்சம். இத்தல கோஷ்டத்தில் அருளும் துர்க்கை, தன் காலடியில் மகிஷன் இல்லாமல் அருள்வது அபூர்வமானது.
*திருநீலக்குடி மனோக்ஞ்ய நாத சுவாமி ஆலயத்தில் வன்னி, கூவிளம், நொச்சி, விளா, மாவிலங்கை ஆகிய ஐந்து மரங்கள் தலமரங்களாகத் திகழ்வதால் பஞ்சவில்வவனேசர் என ஈசன் வணங்கப்படுகிறார். தற்போது ஆலயத்தில் பலாமரமும் ஆறாவது தல மரமாகத் திகழ்கிறது.
*திருவையாற்றுக்குக் கிழக்கே சந்திரன் வணங்கி பேறு பெற்ற திங்களூர் கயிலாயநாதர் ஆலயத்தின் தலவிருட்சங்கள் வாழையும் வில்வமும். அப்பூதியடிகள் மகன் மூத்த திருநாவுக்கரசு பாம்பு தீண்டி இறக்க திருநாவுக்கரசர் ஒன்றுகொலாம் பாடி அவனை பிழைக்கச் செய்த தலம் இது.
*நாகராஜனுக்கு திருமால் திருவருள் புரிந்த நாகப்பட்டினத்தில் அருளும் சௌந்தரராஜப் பெருமாளை அழகியார் என ஆழ்வார்கள் போற்றிப் பாடியுள்ளனர். இங்கு தல விருட்சம் மாமரம்.
*திருக்கழுக்குன்றத்தின் தல விருட்சம் வண்டுவகை வாழையாகும். ஐந்தாம் திருவிழாவில் வாழை மரங்கள் கட்டிய சப்பரத்தில் வேதபுரீஸ்வரர் திரிபுரசுந்தரியுடன் எழுந்தருள்வார். அச்சேவை கதலீவிருட்ச சேவை எனப்படுகிறது.
*திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் திருஞானசம்பந்தரால் ஆண் பனைமரம் பெண் பனைமரமாகி, காய்த்த அற்புதம் நடந்தது. அந்த பனைமரமே ஆலயத்தின் தல விருட்சம். திருவோத்தூர் தலபுராணத்தில் இப்பனை மரம் ஈசனின் அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
*குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் குறும்பலாவே தலவிருட்சம். அந்த மரத்திற்கு தினமும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. புகழ்பெற்ற குற்றாலக்குறவஞ்சியிலும் இம்மரத்தின் பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகலட்சுமி
The post கனி தரும் தல விருட்சங்கள் appeared first on Dinakaran.