விருத்தாசலம், பிப். 18: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள மேல்இருளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் கார்த்திகேயன் (34). இவர் கடந்த 31.12.2024 அன்று பள்ளிக்குச் சென்ற 15 வயது சிறுமியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் சிறுமியின் பெற்றோர் கார்த்திகேயனை பிடித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார், கார்த்திகேயன் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கார்த்திகேயனின் கொடுங்குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கார்த்திகேயனை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார். அதன்பேரில் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
The post கத்தியை காட்டி மிரட்டி சிறுமிக்கு தாலி கட்டிய வாலிபருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.