தோகா: கத்தாரில் நடந்து வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்கா அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். கத்தார் தலைநகர் தோகாவில் பெண்களுக்கான டபிள்யூடிஏ 1000 கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் நேற்று, ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினில் பவுலா படோசா (27வயது, 10வது ரேங்க்), அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா (23வயது, 41வது ரேங்க்) மோதினர். ஒரு மணி 30 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் அனிசிமோவா 6-4, 6-3 என நேர் செட்களில் வெற்றி பெற்றார். அதற்கு முன்னதாக நடந்த மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா (26 வயது, 1வது ரேங்க்), ரஷ்ய வீராங்கனை ஏக்தரினா அலெக்சாண்ட்ரோவா (30வயது, 26வது ரேங்க்) களம் கண்டனர்.
நெம்பர் ஒன் வீராங்கனையான அரைனா எளிதில் வெற்றி பெறுவார் என்பதை நிரூபிப்பது போல் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டை 3-6 என்ற புள்ளிக் கணக்கில் ஏக்தரினாவிடம் பறிகொடுத்தார். ஆளுக்கொரு செட்டை வசப்படுத்தியதால், வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்யும் 3வது சுற்றில் மோதல் கடுமையாக இருந்தது. அதனால் ஆட்டம் டை பிரேக்கர் வரை நீண்டது. அதில் ஏக்தரினா 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி அசத்தினார். எனவே 2 மணி 36 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் ஏக்தரினா 2-1 என்ற செட்களில் அரைனாவை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.
ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பைனலில் வெற்றி வாய்ப்பை இழந்த அரைனா அதற்கு பிறகு இந்தப் போட்டியில்தான் களமிறங்கினார். அதுவும் முதல் சுற்றில் விளையாடாமல் முன்னணி வீராங்கனை என்பதால் நேரடியாக 2வது சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார்.
The post கத்தார் ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி சபாஷ் பெற்ற ஏக்தரினா appeared first on Dinakaran.