
சென்னை,
சின்னத்திரையில், ரியாலிட்டி ஷோக்களில் அசத்தி வரும் கே.பி.ஒய் பாலா, திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், தனது சம்பளத்தில் பாதியை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அதேபோல் திரைப்படம் மற்றும் ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தி வரும் அவர், நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்தது.
மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது, நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக இருக்கும் கே.பி.ஒய் பாலா ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் போன்றோருடன் இணைந்து தனது தொண்டுகளை விரிவுப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் ஷெரீப்பின் புதியப் படத்தின் மூலம் பாலா கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் வைபவ்வின் 25-வது படமாக 'ரணம் - அறம் தவறேல்' எனும் திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். தான் தயாரிக்கும் படத்தில் பாலாவை அறிமுகம் செய்யலாம் என்றிருந்த சமயத்தில் நல்ல கதையுடன் தயாரிப்பாளர் கிடைத்ததாக லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பாலா #01 என்ற தலைப்பில் வெளியான அந்தப் போஸ்டரை இந்தப் படத்தின் கதாநாயகன் மற்றும் இயக்குநர் ஷெரீப் உள்ளிட்டோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுள்ளனர்.மேலும், விவேக்- மெர்வின் ஆகியோரின் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.